Saturday, December 31, 2011

2012 புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்!




எனது இணைய நண்பர்கள்/தோழிகள், தமிழ்நாடு குறுஞ்செய்திக் கவிஞர் குடும்ப உறுப்பினர்கள் அனைவருக்கும் எனது மனங்கனிந்த 2012 புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்!


- கிரிஜா மணாளன்

Monday, December 12, 2011

புதிய கவிஞர்களை அன்புடன் வரவேற்கிறேன்!





வணக்கம்.

நமது தமிழகக் குறுஞ்செய்திக் கவிஞர்கள் பலர் இந்த வலைத்தளத்தில் தமது கவிதைகளை வழங்கியிருப்பதைக் கண்டு, புதிய கவிஞர்களும் ஆர்வமுற்று தம் படைப்புகளை வழங்க முன்வந்துள்ளனர். மிக்க மகிழ்ச்சி!

தற்போது எனக்கு அறிமுகமாகியுள்ள கீழ்காணும் பெண் கவிஞர்களின் படைப்புகளை விரைவில் எதிர்பார்க்கிறேன்.

1. திருமதி. ச. வளர்மதி. ஈரோடு (தமிழ்நாடு)

2. திருமதி. தமயந்தி. கள்ளக்குறிச்சி, (தமிழ்நாடு)



உங்கள் படைப்புகளுடன். இவ்வலைத்தளம் புதிய பொலிவோடு மிளிருமென அன்புடன் எதிர்பார்க்கிறேன். நன்றி.


- கிரிஜா மணாளன்

Wednesday, October 5, 2011

அன்புடன் அழைக்கின்றோம்

எங்கள் ‘குறுஞ்செய்திக் கவிஞர்கள் குடும்ப’ (Mobile SMS Kavignarkal) உறுப்பினர்களின் 6 வது சந்திப்பு மற்றும் 2 வது ஆண்டுவிழாவிற்கு அனை வரையும் அன்புடன் அழைக்கின்றோம்.

நாள் : 09.10.2011 (ஞாயிறு)
நேரம்: காலை 09.00 லிருந்து மாலை 4 மணி வரை.
நிகழ்விடம்:
முன்னாள் கூட்டுறவு வங்கி
NNR பிரியாணி ஹோட்டல் எதிர்புறம்)
அம்மாப்பேட்டை மெயின் ரோடு
சேலம் - 636 001

சிறப்பு அழைப்பாளர்கள் பலருடன், தமிழகத்தின் பல மாவட்டங்களிலிருந்தும் கவிஞர்கள் பங்கேற்க வருகிறார்கள்.
எங்களது அமைப்புசாரா இக்கவிக்குழுமத்தின் முதல் சந்திப்பு நிகழ்ச்சி, தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களிலுள்ள குறுஞ்செய்தியாளர்களை ஒருங் கிணைக்கும் நிகழ்ச்சியாக கடந்த 2009, செப். 13 அன்று திருச்சியில் நிகழ்ந்தது. தொடர்ந்து, திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு, ஈரோடு மாவட்டம் அந்தியூர், மீண்டும் திருச்சியில் முதாலாம் ஆண்டு விழா, தொடர்ந்து, திருச்சியில் ஓர் சந்திப்பு நிகழ்ச்சி. இவற்றைத் தொடர்ந்து, இப்போது சேலம் மாநகரில் ஒன்றுகூடுகிறோம்.
குறுஞ்செய்திக் கவிஞர்கள், அச்சு இதழ்களில் மட்டுமின்றி, இப்போது இணைய தளங்களிலும் தமது படைப்புகளை வழங்கி புகழ்பெற்று வருவது மகிழ்ச்சி தரும் செய்தி. இணையதளத்தின் ‘அன்புடன்’, ‘முத்தமிழ்’, ‘தமிழ்த்தென்றல்’, ‘பல்சுவை’, ‘தமிழமுதம்’ மற்றும் பல வலைத்தளங்களிலும் இடம் பெற்று தங்கள் படைப்புகளை வழங்கி வருகிறார்கள்.
இப்போது சேலம் மாநகரில் நிகழும் ‘சந்திப்பு விழா’வில் பங்கேற்க “தமிழ்த்தென்றல்” குழுமத் தலைவர் திரு. என்.யு.துரை அவர்கள் இசைந்துள்ளார்கள். சேலம் மாவட்டம், மற்றும் அண்டை மாவட்டங்களிலுள்ள ‘இணையதள குழுமங்களின் உறுப்பினர்களும், கவிதையார்வலர்களும் இவ்விழாவிற்கு வருகை தந்து எங்களை மகிழ்விக்க அன்புடன் வேண்டுகிறோம்.
அன்புடன்,
குறுஞ்செய்திக் கவிஞர்கள் குடும்பம்
தமிழ்நாடு.

ஒருங்கிணைப்பாளர்: கிர்ிஜா மணாளன், திருச்சி

விழா ஏற்பாடு: திருமதி. எஸ். சுமதி, சேலம்

Monday, March 28, 2011

"வார்ப்பு.காம்" கவிதைத் தளத்தில் பிரசுரமாகியுள்ள எனது கவிதை:

(அந்தத் தளத்தில் அவ்வப்போது தரப்படும் தலைப்பிற்குத் தக்க கவிதைகளைப் புனைந்து அனுப்புமாறு நமது குறுஞ்செய்திக் குழுமக் கவிஞர்களுக்கு நான் அனுப்பிவரும் தகவலின்படி அவர்கள் எனக்கு அனுப்பும் கவிதைகளை அத்தளத்தில் பதிவிட்டு வருகிறேன். இதுவரை நமது குழுமக் கவிஞர்களின் 20 கவிதைகள் பிரசுரமாகியுள்ளன.
இதுவரை இவ்வாய்ப்பைப் பயன்படுத்திக்கொள்ளாதோர், இனியாவது முன்வரவேண்டுமென அன்புடன் அழைக்கிறேன்)

நீயா? நானா?

நீயா? நானா என்ற போட்டி
நிலைத்துவிட்ட சமூகம் இது!
அனைத்து இன மக்களுக்கும்
அவலமில்லா வாழ்வுதர
போட்டியிடும் தலைவர்கள்
புறப்படத் தயாரில்லை!
கள்ள ஓட்டில் பதவிபெற்று
கணிசமாக சம்பாதிக்க
கனவுகாணும் காலத்தில்
கரிசனமில்லா மனிதர்களாய்!

நீயா நானா போட்டியால்
நிர்மூலம் தான் சனநாயகம்,
ஓயாத பிரச்சினைகளால்
ஒடுங்கி நிற்கும் மக்களினம்!

- கிரிஜா மணாளன், திருச்சிராப்பள்ளி
(தமிழ்நாடு)

Saturday, March 26, 2011

"வார்ப்பு.காம்" கவிதைத்தளத்தில் நமது குறுஞ்செய்திக் குழுமத்தின் கவிஞர்கள்!




அன்புடையீர், வணக்கம்.

நமது குறுஞ்செய்திக் குழுமத்தின் கவிஞர்கள் இணையத்தின் "வார்ப்பு.காம்" கவிதைத்தளத்தில் வழங்கிவரும் கவிதைகளின் எண்ணிக்கை நாளுக்கு நாள் பெருகிவருகின்றன என்பது மகிழ்ச்சி தரும் செய்தி.

அத்தளத்தில் கவிதைக்கான தலைப்பு அறிவிக்கப்பட்டதும். நான் அனுப்பும் தகவலைக் கண்டு தங்கள் கவிதைகளை அனுப்பி, அவர்கள் கவிதைகளை நான் பதிவிடும் நல்வாய்ப்பை எனக்களித்து வரும் தோழர்கள்/தோழியர்களுக்கு என் நன்றி.

உங்கள் ஒத்துழைப்பினை எனக்கு தொடர்ந்து அளியுங்கள்.

கூகுள் குழுமங்களான "அன்புடன்", "முத்தமிழ்". "பல்சுவை" ஆகிய குழுமங்களில் நமது நண்பர்களின் கவிதைகள் தொடர்ந்து பிரசுரிக்கப்பட்டு வருகின்றன. கவிதை ஆர்வலர்கள் அக்குழுமங்களுக்கு சென்று கண்டு, உங்கள் கருத்துக்களையும் பாராட்டுக்களையும் அவர்களுக்கு வழங்கி, அவர்களை ஊக்குவிக்க வேண்டுகிறேன். நன்றி!

அன்புடன்,

கிரிஜா மணாளன்.

Wednesday, March 9, 2011

உலக மகளிர் தினம்

அன்புடையீர், வணக்கம்.

“உலக மகளிர் தினத்தை மகிழ்வுடன் கொண்டாடும் அனைத்துலக மகளிருக்கும்,
எங்கள் ‘தமிழ்நாடு அலைபேசிக் குறுஞ்செய்திக் கவிதைக் குழும’ (Mobile SMS
Poets of Tamilnadu) த்தின் கவிஞர்கள் சார்பில் எனது நல்வாழ்த்துக்கள்!
‘’மங்கையராய்ப் பிறப்பதற்கே நல்ல மாதவம் செய்திட வேண்டுமம்மா!” என்று
மகளிர் குலத்தைப்போற்றிய அந்த மகாகவியின் எண்ணப்படி, இன்று அகில உலகிலும்
தங்களை அனைத்துத் துறைகளிலும் நிலைநிறுத்திக்கொண்டு சிறப்பினைப்
பெற்றுவரும் மகளிர்தம் சிறப்பைப் போற்றும் வண்ணம் எங்கள் கவிஞர்கள்
உருவாக்கிய சில கவிதைகளை நமது ‘அன்புடன்’ குழுமத்தில் www.groups.google.co./group/anbudan)உங்கள் பார்வைக்கு வைத்துள்ளேன்.
உங்கள் பின்னூட்டங்களும், பாராட்டும், விமரிசனங்களும் இக்கவிஞர்களை
மேன்மேலும் ஊக்குவித்து அவர்களைக் கவிதையுலகில் காலூன்றச்செய்யும் என்ற
நம்பிக்கையுடன்.....


உங்கள்,
கிரிஜா மணாளன்
=========================================================

தன்னம்பிக்கை கொள்!
------------------------------
கண்ணீர் விட்டது போதும்,
கண்களைத் துடைத்திடு பெண்ணே!
உன் பாதம் போகும் வழி மறந்து,
நல்பாதை போகும் வழி தேடு!
இலையுதிர் காலம்தான் இது உனக்கு,
அதற்காக
இழந்துவிடாதே நம்பிக்கையை!
சமுதாயமே சகாராவானாலும்,
உன் நம்பிக்கை ஒரு நைல்நதி ஊற்று!
வசந்தகாலம் வெகுதொலைவில் இல்லை!
வரப்போகும் காலம் உன்
வாழ்க்கையின் வசந்தம்!
தளர்ச்சி கொள்ளாதே,
தன்னம்பிக்கை நீ கொண்டால்,
சுற்றும் பூமியையும்
சற்று நிறுத்தலாம்!


- முனைவர் ஜோதி கார்த்திக், திருச்சி
(தமிழ்நாடு)
-------------------------------------------------------------------

வலிகளே உனது வலிமை!
====================

வலிகளே உனது வலிமை - பெண்ணே
வருந்தாதே இது உனது உடைமை!
வானுறை தெய்வத்தின் மேலாய் - பெண்ணை
வாழ்த்துகின்ற காரணத்தினாலே!

கன்னிப் பருவமதை எய்திடும்போதும்
காதலுடன் காளையவனைக் கூடும்போதும்
பத்துமாதப் பந்தமொன்றைப் பெறும்போதும்
பாலையுண்ணும் சிசுமார்பி லுதைக்கும்போதும்
வலிகளே உனது வலிமை!

உற்றார் உறவினர் உயர்வுக்கும்
உனைச்சார்ந்த உறவுகளின் மேன்மைக்கும்
உள்ளமிரங்கி நீ யாற்றூம் பணிகள்தன்னில்
உடல்வருத்தி யுழைப்பதினால் தோன்றுகிற
வலிகளே உனது வலிமை!

ஏற்றம்பிடித்து நீரை நீ இறைக்கும்போதும்
நாற்றாங்காலில் நடவதனைச் செய்யுபோதும்
விளையும் பயிர் வீடுவந்து சேரும்வரை
வெயில்பனி உளைச்சலினால் விளைகின்ற
வலிகளே உனது வலிமை!

வலியின் விளைவு வசந்தமெனில் - அந்த
வசந்தத்தின் வரவு நிலைக்குமெனில்
வலிகளே உனது உடன்பிறப்பு - அதை
வரவேற்பதே உனது தனிச்சிறப்பு!


- தனலட்சுமி பாஸ்கரன், திருச்சி.
(தமிழ்நாடு)

=======================================
ஒதுக்கீடு!
========

ஒதுக்கீடு கேட்டு ஓயாமல் போராடியும்
ஒதுக்கப்பட வேண்டியவை எங்களுக்கு
ஒதுக்கப்படவில்லை.....
ஆனால்......
ஒன்றுமே போராடாமல்
ஒதுக்கிவிடுகிறார்கள் எங்கள் மாமியார்கள்
எங்களையே.......
அவர்கள் இதயத்திலிருந்து!

- சி. கலைவாணி, வேலூர்
(தமிழ்நாடு)
================================================
அடிமை!
=========

யாருக்குக் கேட்கும்
எங்கள் இதயத்தின் நாதம்?
எப்போது உருகிப் பாடும்
எங்கள் சுதந்திர கீதம்?

எனக்குள் செய்கிறேன்
புதுமைப் பெண்ணென்ற விவாதம்.,
நாங்கள் அடிமை என்பதுதானா
எங்கள் வாழ்வின் வேதம்?

பெண்ணுரிமை என்பதெல்லாம் உங்கள்
பேச்சளவில்தானா?
மண்ணுக்குள் போகும்முன்பே அதை
மனமாரக் காண்போமா?

- தே. ரம்யா, திருவண்ணாமலை, (தமிழ்நாடு)
======================================

பெண்ணே நீ.........
-------------------------------------

பெண்ணே! உனக்கு எதிரி
மாமியாருமில்லை - போலி
சாமியாருமில்லை!
நீ, நீயேதான்!
உன்னைப் பிணைத்திருப்பது
இரும்பு விலங்கல்ல,
சின்ன நூல்தான்!
தொலைக்காட்சி ஊடகத்தின்
போலி சோகங்களில் உன்
நிஜமுகத்தைத் தொலைக்காதே!
உன் கழுத்து
தங்கநகைக்காக மட்டுமல்ல,
தங்க மெடல்களுக்காகவும் தான்!

- முத்து விஜயன், கல்பாக்கம், சென்னை
(தமிழ்நாடு)

---------------------------------------------------------------------

பாரதியின் வழியில்.......
--------------------------------------
தாய்க்குத் தலைமகளாய்
ஜென்மம் எடுத்த நாள்முதலாய்,
துணிந்தே நடக்கின்றேன்,
துன்பங்களையும் சகித்தபடி.
பதவியில் இருந்தபோது
பலர் போற்றும் உழைப்பாளியாய்,
கட்டிய கணவனின்
கருத்தறிந்த மனைவியாய்,
புரளி பேசுவோர்முன்
புலியாய், புரட்சிப் புயலாய்!
வீரம், விவேகம், தன்னம்பிக்கை
விதைகளை என்னுள்
விதைத்தது
‘பாரதி’யென்னும் உழவனின்
பார்போற்றும் கரங்கள்தான்!

- எஸ். சுமதி, சேலம்.
(தமிழ்நாடு)
-------------------------------------------------------------------

எழுச்சி கொள்வீர்!
--------------------------
பால்யத் திருமணமும்
பாலியல் குற்றங்களும் குறைந்தும்,
நீங்கிடவில்லை இன்னும்
பெண்ணடிமைக் கொடுமை!
நாகரிகப் போர்வையில்,
அங்கங்களைப் படமெடுத்து
ஆதாயச் சந்தையில் விற்கத்துணியும்
விஞ்ஞான விபரீத உலகமிதில்...
பெண்ணுரிமை பேசி
பொய்மையாய் வாழும் ஆண்களிடம்
அல்லல்பட்டு அடிபணியும்
அவலநிலையும் மாறவில்லை!
எழுச்சி கொண்டு சபதந்தன்னை,
எடுத்திடுவீர் இந்த மகளிர் நாளில்!

- ஹயத் பாஷா (JKK SMS Editor) சென்னை
(தமிழ்நாடு)
------------------------------------------------------------

புதுமைப்பெண்
===========
நிமிர்ந்த நடை
நேர்கொண்ட பார்வையோடு,
எத்தொழிலும் இன்று
முத்திரை பதித்து,
நித்தமும் புதுமலராய்.............
பாரதி கண்ட
புதுமைப் பெண்கள்!

- கொள்ளிடம் காமராஜ், (KKI SMS Editor) திருச்சி.
(தமிழ்நாடு)
====================================

எக்காலம்?
--------------
ஆண்டுதோறும் மகளிர்தினம்
கொண்டாடியும்
அகம் நிறையவில்லை எங்களுக்கு.
வேண்டுவன கேட்டும் கிடைக்கவில்லை,
எங்கள்
வேதனையை யாருமிங்கே
மதிப்பதில்லை!
யோசிக்கும் நிலையில் ஆள்வோர் இருக்க,
நாங்கள்
யாசிக்கும் நிலை மாறுவது
எக்காலம்?

- கிரிஜா நந்தகோபால், திருச்சி
(தமிழ்நாடு)

Saturday, February 26, 2011

வணக்கம்.


அன்புடையீர், வணக்கம்.

நமது குறுஞ்செய்திக் கவிஞர்கள் குடுமபத்தின் அனைத்து படைப்பாளிகளையும் இணையதளத்தில் அறிமுகம் செய்யும் நோக்கத்துடன், எனது வலைத்தளங்களில் அவர்களது படைப்புகளைப் பிரசுரித்து வருகிறேன். இதற்கு ஒத்துழைப்பு நல்கிவரும் உங்கள் அனைவருக்கும் எனது நன்றி.

உங்கள் படைப்புகளை அலைபேசியில் எனக்கு அனுப்பும்போது, தெளிவாக டைப் செய்தும், உங்கள் பெயர், ஊர் ஆகியவற்றை தெளிவாகக் குறிப்பிட்டும் அனுப்பவேண்டுகிறேன்.

உங்கள் படைப்புகளை இணையத்தில் வெளியிட்டபின், உங்களுக்கு நான் தகவல் அறிவித்ததும், தவறாமல் இணயதளத்தில் உங்கள் படைப்புகளைக் கண்டு மகிழுங்கள்.

ஓர் அழகான குழந்தையைப் பெற்றெடுக்கும் அன்னையானவள், முதன்முதலாக அதன் முகத்தைக் கண்டு பூரித்து மகிழும் உணர்வை நீங்கள் பெறலாமே!

உங்கள் படைப்புகளை வாசித்து மகிழும் உலகளாவிய வாசகர்களின் பின்னூட்டத்தை அவ்வப்போது நமது வலைத்தளங்களில் பதிவிட்டு, உங்கள் பார்வைக்கு வைக்கும் பணியிலும் உற்சாகமாய் ஒருகிறேன்.

எனது கவிதைத்தளங்களை அலங்கரிக்க படைப்புகளை அளித்துவரும் உங்கள் அனைவருக்கும் எனது மனங்கனிந்த நன்றி, என்றென்றும்!

அன்புடன்,

கிரிஜா மணாளன்

குறுஞ்செய்திக் கவிதைகள்!


குறுஞ்செய்திக் கவிதைகள்!=====================

பெருவிரல்களுக்குள் உறவுகள்
விருட்சமாய்
நவீனயுக விதைகளாய் கைப்பேசியில்
குறுஞ்செய்திக் கவிதைகள்!

- கவிஞர் கு. லட்சுமணன், புதுப்பட்டினம்
(தமிழ்நாடு)




விலைமகளிர்!
------------

பல மொழிகள் அறிந்திருக்கிறாள்
மொழிப்பற்றினால் அல்ல!
'தொழிலுக்காக'!
வாய்பேச வாய்ப்ப்பில்லா தருணமதில்
தாய்மொழியே 'முனகல்'தானே!

- கவிஞர் சுமதி, சேலம்
(தமிழ்நாடு)


அம்மணமாய்.....
---------------

அரசு உதவிகள் கையூட்டு
ஆடை அணிந்துகொள்ள
உதவிகேட்பவர்கள்
அம்மணமாய் அணிவகுப்பு!

- கவிஞர் கயாத் பாஷா, சென்னை
(தமிழ்நாடு)



தனம்!
=====
எல்லோருக்கும் உயிரூட்டும் தனம்
கல்லாய்க் கிடக்கிறது ஸ்விஸ் வங்கியில்
இந்தியச் செல்வம்!

- கவிஞர் முருகா, திருப்பூர்
(தமிழ்நாடு)

Thursday, February 24, 2011



தலைகுனிந்தே.......
==================

நிமிர்ந்து நடக்க ஆசைப்பட்டும்,
முடியவில்லை.......மனிதர்கள்
உமிழ்ந்துவிட்டுப் போகும்
எச்சில்களும்
மிருகங்களின் கழிவுகளினாலும்
தலைகுனிந்தே நடக்கிறேன் நான்...
பாரதியின் சொல்லை
சற்றே மறந்து!

- எஸ். சுமதி, சேலம்
(தமிழ்நாடு)

Sunday, February 20, 2011

காதல் ஓவியம் -------------

காதல் ஓவியம்
-------------

தூரிகையின்றி வரைந்தோம்
நம் கண்களால்,
முழுமை அடைந்தது
காதல் ஓவியம்.

- எஸ். சுமதி, சேலம்
(தமிழ்நாடு)

Monday, February 14, 2011

கன்னக்குழி!


கன்னக்குழி!
சிட்டிகை அளவு
மண்கொண்டு நிரப்பிவிடும்
சின்னக்குழிகள் என்றாலும்,
சட்’டென விழவைத்துவிட்டது என்னை
உன் கன்னக்குழி!

- தனபால், ராசிபுரம் (தமிழ்நாடு)

Wednesday, February 9, 2011

நம்பிக்கை!


நம்பிக்கை!

தவமியற்றுகின்றன
சிப்பிகளுக்குள் உயிர்கள்
முத்தாகும் நம்பிக்கையில்.

- மீனாதேவி, நாகர்கோவில்
(தமிழ்நாடு)

திருட்டு!


திருட்டு!

இமைப்பொழுதில் என்
இதயம் திருடியவளே! - நான்
இமைக்காது பார்க்கையில்
எப்படி திருடினாய்?

- முத்து விஜயன், கல்பாக்கம்.
(தமிழ்நாடு)

மழை!

முப்போகம் விளைய உதவிய
முதலாளியாய் அன்று....
கான்கிரீட் வீடுகளை
கழுவிச் சுத்தப்படுத்தும்
சேவகனாய் இன்று!

- க. இளையராஜா, சாத்துக்கூடல், (தமிழ்நாடு)

இதழ்கள்!

இதழ்கள்!

நுரைத்துப் பொங்கும் பாலை
உதடு குவித்து ஊதி
உஷ்ணம் குறைத்து
தேனீர் சமைத்து பகிர்ந்தாய்.
உன் இதழ்கள் சுவைத்த
திருப்தி எனக்கு!
- சாரா (சரவணன்) சென்னை-99
(தமிழ்நாடு)

Monday, January 31, 2011

ரோஜா!


ரோஜா!

அவள் கிள்ளிப்பார்த்த ரோஜாவால்
வலிகொண்ட செடி
அழத்தெரியாமல்
பூவாய் அரும்பத்தொடங்கியது
மற்றொரு கிளையொன்றில்.

- தியாகு, வாயலூர். தமிழ்நாடு.

கனவுகள்!

புதுவீட்டில் முதல் உறக்கம்
வர மறுத்து
வாசலிலேயே நிற்கின்றன
பழையவீட்டு பற்றிய
கனவுகள்.

- ராசை. கண்மணி ராசா இராசபாளையம் (தமிழ்நாடு)

Saturday, January 29, 2011

புதிய கவிஞர்களின் படைப்புகளும்.......

அன்புடையீர், வணக்கம்.

இதுவரை நமது அலைபேசி குறுஞ்செய்திக் கவிஞர்கள் 50 க்கு மேற்பட்டோரின் கவிதைகள் இந்த வலைத்தளத்தில் இடம்பெற்றுள்ளதைத் தொடர்ந்து, இப்போது நம்மிடையே அறிமுகமாகியுள்ள பிரசுரிக்கப்பட்டு வருகின்றன. அனைவரையும் ஊக்குவிக்கும் நோக்கத்தோடு நான் இந்த பணியில் ஈடுபட்டுள்ளதால், படைப்பினை ரசிப்போர் இக்கவிதைகளுக்கான உங்கள் விமரிசனங்களை இடுமாறு அன்புடன் வேண்டுகிறேன்.

வாசகர்கள் அளிக்கும் ஊக்கம் படைப்பாளர்களின் கவிதையாற்றலை மேம்படுத்தும் என்பதில் ஐயமில்லை. நன்றி!
அன்புடன்,

கிரிஜா மணாளன்
(எடிட்டர்)

Saturday, January 22, 2011

காதணி விழா!

காதணி விழா!
காலம் காலமாய் நிகழ்கிறது
அழுகையை அடக்கும் முயற்சிகள்
இனிப்புத் திணிப்பில்
இனிதே முடியும்
காதணி விழாக்கள்!

- கு. லட்சுமணன், புதுப்பட்டினம்,
(தமிழ்நாடு)

தீவிரவாதம்!

தீவிரவாதம்!
அடிக்கடி தோண்டியெடுக்காததால்
அடிக்கடி துளிர்த்துக்கொண்டுதான் இருக்கும்
மதத்தீவிரவாதம்.....
ஆணிவேரில் அமிலம் ஊற்றும்
தலைமுறை தழைக்கும்வரை!

- ஹயத் பாஷா,
சென்னை-81 (தமிழ்நாடு)

மரத்தின் கண்ணீர்!


மரத்தின் கண்ணீர்!
நீயில்லாமல் நான் வாழமுடியும்
நான் இல்லாமல் நீ.......?
- குலுங்கிக் குலுங்கி அழுகிறது மரம்.
நீ வெட்டும்போதும்
உனக்காக!

- மு.வேலா. கல்லக்குடி (டால்மியாபுரம்)
திருச்சி (தமிழ்நாடு)

பரிசு!


பரிசு!

பந்தயக்குதிரைக்குப் பணம் கட்டி
வாழ்க்கையின் ஓட்டத்தில் பின்தங்கி
வறுமையையே பரிசாக வெல்கிறான்
சூதாட்டக்காரன்.

- தியாகு, வாயலூர், (தமிழ்நாடு)