Monday, July 25, 2016





















மனித தெய்வம்  ,பி,ஜே, அப்துல்கலாம் எடுத்த
11 அவதாரங்கள்!

1.      மனிதகுலத்தின்மேல் பேரன்பு காட்டி,சீராட்டி வளர்த்த தெய்வத்தாய்!
2.      நாட்டுமக்களுக்கு இறுதிமூச்சுவரை தன் கடமைகளைச் செய்த, கடமை தவறாத        தந்தை!
3.      இந்திய மக்களின் முன்னேற்றத்திற்கு அடிப்படை தேவை கல்விதான் என்பதை         உணர்ந்து, பறந்து பறந்து, பாடம் புகட்டிய நிலையிலேயே, இன்னுயிர் நீத்த ஆசான்!
4.      நாட்டு மக்களின் உயிர்காக்கப் போராடிய முப்படைகளின் வீரத்தளபதி!
5.      நாடு மற்றும் உலகமுன்னேற்றத்திற்கு அத்தியாவசியமான அறிவியல் முன்னேறத்     திற்காக அல்லும் பகலும் அயராது உழைத்த விஞ்ஞானி!
6.      ஏழை, எளிய, நடுத்தர மக்களின் நலனுக்காக அரும்பாடுபட்ட தர்மசிந்தனையாளன்!
7.      நோய்வாய்ப்பட்டோர்  மற்றும்  உடல் ஊனமுற்றோர் நலம்பேண அரிய மருத்துவக்        கண்டுபிடிப்புகளைத் தந்த  மருத்துவர்!
8.      கடின  உழைப்புதான்  முன்னேற்றத்திற்கு ஒரேவழி என்பதை உலகுக்கு உணர்த்திய   உன்னத உழைப்பாளி!
9.      இந்தியாவை 2020ல் வல்லரசாக்கியே தீருவேன் என்று ஒவ்வொரு இந்தியனையும்      சபதமேற்கத் தூண்டிய போராளி!
10.     அரசியல் கொள்கைகள், வேறுபாடுகள், ஏழை - பணக்காரன், படித்தவர் - படிக்காதவர்  போன்ற பாகுபாடுகள் பார்க்காமல், இறுதிமூச்சு வரை  பறந்து      பறந்து மக்களிடையே  தன் உன்னத கருத்துக்களைப்  பரப்பிய  சுதந்திரப் பறவை!
11.     50 ஆண்டுகளாகியும் பலரால் சாதிக்க முடியாததை, 3 ஆண்டுகள் பதவிக்காலத்தில்     சாதித்துக்காட்டிய, இந்திய மக்கள் அனைவரையும் இலட்சியக்கனவு காணவைத்த   சாதனையாளன்!    
 (நன்றி : பேராசிரியர்  ஆர்.ரெங்கராஜன், திருச்சி)
பதிவு : - கிரிஜா மணாளன்







Thursday, July 7, 2016

கேள்விகள்!
=============

தோண்டாமல் வைரங்கள் கிடைப்ப தில்லை!
தூண்டாமல் தீபங்கள் எரிவ தில்லை!
தாண்டாமல் தூரங்கள் குறைவ தில்லை!
தானாக மாற்றங்கள் வருவ தில்லை!

ஆண்டாண்டு காலங்கள் மனித வாழ்வில்
அற்புதங்கள் நிகழ்த்தியது கேள்வி யாகும்!
பாண்டியனை வீழவைத்து மதுரையில் தீ
பரப்பியது கண்ணகியின் கேள்வி யாகும்!

ஆச்சரியக் குறிகளெல்லாம் அணி வகுக்க
அடிப்படையே வினாக்குறிதான்! முன்னேற்றத்தின்
மூச்சாக இருப்பதும் அடிமைகள் கூன்
முதுகுகளை நிமிர்த்துவதும் கேள்வி யால்தான்!

குருட்டுவிழி ஒலிபெறவே பாதை காட்டி
குழப்பங்கள் தெளிவாக்கும் கேள்விகள் தாம்
இருட்டுமென விடிவெள்ளி; ஞானத்தூண்டில்!
இவையின்றேல் அடைபடுவோம் மௌனக் கூண்டில்!


- கவிஞர் வல்லம் தாஜுபால் (தஞ்சை தாமு)