Monday, March 28, 2011

"வார்ப்பு.காம்" கவிதைத் தளத்தில் பிரசுரமாகியுள்ள எனது கவிதை:

(அந்தத் தளத்தில் அவ்வப்போது தரப்படும் தலைப்பிற்குத் தக்க கவிதைகளைப் புனைந்து அனுப்புமாறு நமது குறுஞ்செய்திக் குழுமக் கவிஞர்களுக்கு நான் அனுப்பிவரும் தகவலின்படி அவர்கள் எனக்கு அனுப்பும் கவிதைகளை அத்தளத்தில் பதிவிட்டு வருகிறேன். இதுவரை நமது குழுமக் கவிஞர்களின் 20 கவிதைகள் பிரசுரமாகியுள்ளன.
இதுவரை இவ்வாய்ப்பைப் பயன்படுத்திக்கொள்ளாதோர், இனியாவது முன்வரவேண்டுமென அன்புடன் அழைக்கிறேன்)

நீயா? நானா?

நீயா? நானா என்ற போட்டி
நிலைத்துவிட்ட சமூகம் இது!
அனைத்து இன மக்களுக்கும்
அவலமில்லா வாழ்வுதர
போட்டியிடும் தலைவர்கள்
புறப்படத் தயாரில்லை!
கள்ள ஓட்டில் பதவிபெற்று
கணிசமாக சம்பாதிக்க
கனவுகாணும் காலத்தில்
கரிசனமில்லா மனிதர்களாய்!

நீயா நானா போட்டியால்
நிர்மூலம் தான் சனநாயகம்,
ஓயாத பிரச்சினைகளால்
ஒடுங்கி நிற்கும் மக்களினம்!

- கிரிஜா மணாளன், திருச்சிராப்பள்ளி
(தமிழ்நாடு)

Saturday, March 26, 2011

"வார்ப்பு.காம்" கவிதைத்தளத்தில் நமது குறுஞ்செய்திக் குழுமத்தின் கவிஞர்கள்!




அன்புடையீர், வணக்கம்.

நமது குறுஞ்செய்திக் குழுமத்தின் கவிஞர்கள் இணையத்தின் "வார்ப்பு.காம்" கவிதைத்தளத்தில் வழங்கிவரும் கவிதைகளின் எண்ணிக்கை நாளுக்கு நாள் பெருகிவருகின்றன என்பது மகிழ்ச்சி தரும் செய்தி.

அத்தளத்தில் கவிதைக்கான தலைப்பு அறிவிக்கப்பட்டதும். நான் அனுப்பும் தகவலைக் கண்டு தங்கள் கவிதைகளை அனுப்பி, அவர்கள் கவிதைகளை நான் பதிவிடும் நல்வாய்ப்பை எனக்களித்து வரும் தோழர்கள்/தோழியர்களுக்கு என் நன்றி.

உங்கள் ஒத்துழைப்பினை எனக்கு தொடர்ந்து அளியுங்கள்.

கூகுள் குழுமங்களான "அன்புடன்", "முத்தமிழ்". "பல்சுவை" ஆகிய குழுமங்களில் நமது நண்பர்களின் கவிதைகள் தொடர்ந்து பிரசுரிக்கப்பட்டு வருகின்றன. கவிதை ஆர்வலர்கள் அக்குழுமங்களுக்கு சென்று கண்டு, உங்கள் கருத்துக்களையும் பாராட்டுக்களையும் அவர்களுக்கு வழங்கி, அவர்களை ஊக்குவிக்க வேண்டுகிறேன். நன்றி!

அன்புடன்,

கிரிஜா மணாளன்.

Wednesday, March 9, 2011

உலக மகளிர் தினம்

அன்புடையீர், வணக்கம்.

“உலக மகளிர் தினத்தை மகிழ்வுடன் கொண்டாடும் அனைத்துலக மகளிருக்கும்,
எங்கள் ‘தமிழ்நாடு அலைபேசிக் குறுஞ்செய்திக் கவிதைக் குழும’ (Mobile SMS
Poets of Tamilnadu) த்தின் கவிஞர்கள் சார்பில் எனது நல்வாழ்த்துக்கள்!
‘’மங்கையராய்ப் பிறப்பதற்கே நல்ல மாதவம் செய்திட வேண்டுமம்மா!” என்று
மகளிர் குலத்தைப்போற்றிய அந்த மகாகவியின் எண்ணப்படி, இன்று அகில உலகிலும்
தங்களை அனைத்துத் துறைகளிலும் நிலைநிறுத்திக்கொண்டு சிறப்பினைப்
பெற்றுவரும் மகளிர்தம் சிறப்பைப் போற்றும் வண்ணம் எங்கள் கவிஞர்கள்
உருவாக்கிய சில கவிதைகளை நமது ‘அன்புடன்’ குழுமத்தில் www.groups.google.co./group/anbudan)உங்கள் பார்வைக்கு வைத்துள்ளேன்.
உங்கள் பின்னூட்டங்களும், பாராட்டும், விமரிசனங்களும் இக்கவிஞர்களை
மேன்மேலும் ஊக்குவித்து அவர்களைக் கவிதையுலகில் காலூன்றச்செய்யும் என்ற
நம்பிக்கையுடன்.....


உங்கள்,
கிரிஜா மணாளன்
=========================================================

தன்னம்பிக்கை கொள்!
------------------------------
கண்ணீர் விட்டது போதும்,
கண்களைத் துடைத்திடு பெண்ணே!
உன் பாதம் போகும் வழி மறந்து,
நல்பாதை போகும் வழி தேடு!
இலையுதிர் காலம்தான் இது உனக்கு,
அதற்காக
இழந்துவிடாதே நம்பிக்கையை!
சமுதாயமே சகாராவானாலும்,
உன் நம்பிக்கை ஒரு நைல்நதி ஊற்று!
வசந்தகாலம் வெகுதொலைவில் இல்லை!
வரப்போகும் காலம் உன்
வாழ்க்கையின் வசந்தம்!
தளர்ச்சி கொள்ளாதே,
தன்னம்பிக்கை நீ கொண்டால்,
சுற்றும் பூமியையும்
சற்று நிறுத்தலாம்!


- முனைவர் ஜோதி கார்த்திக், திருச்சி
(தமிழ்நாடு)
-------------------------------------------------------------------

வலிகளே உனது வலிமை!
====================

வலிகளே உனது வலிமை - பெண்ணே
வருந்தாதே இது உனது உடைமை!
வானுறை தெய்வத்தின் மேலாய் - பெண்ணை
வாழ்த்துகின்ற காரணத்தினாலே!

கன்னிப் பருவமதை எய்திடும்போதும்
காதலுடன் காளையவனைக் கூடும்போதும்
பத்துமாதப் பந்தமொன்றைப் பெறும்போதும்
பாலையுண்ணும் சிசுமார்பி லுதைக்கும்போதும்
வலிகளே உனது வலிமை!

உற்றார் உறவினர் உயர்வுக்கும்
உனைச்சார்ந்த உறவுகளின் மேன்மைக்கும்
உள்ளமிரங்கி நீ யாற்றூம் பணிகள்தன்னில்
உடல்வருத்தி யுழைப்பதினால் தோன்றுகிற
வலிகளே உனது வலிமை!

ஏற்றம்பிடித்து நீரை நீ இறைக்கும்போதும்
நாற்றாங்காலில் நடவதனைச் செய்யுபோதும்
விளையும் பயிர் வீடுவந்து சேரும்வரை
வெயில்பனி உளைச்சலினால் விளைகின்ற
வலிகளே உனது வலிமை!

வலியின் விளைவு வசந்தமெனில் - அந்த
வசந்தத்தின் வரவு நிலைக்குமெனில்
வலிகளே உனது உடன்பிறப்பு - அதை
வரவேற்பதே உனது தனிச்சிறப்பு!


- தனலட்சுமி பாஸ்கரன், திருச்சி.
(தமிழ்நாடு)

=======================================
ஒதுக்கீடு!
========

ஒதுக்கீடு கேட்டு ஓயாமல் போராடியும்
ஒதுக்கப்பட வேண்டியவை எங்களுக்கு
ஒதுக்கப்படவில்லை.....
ஆனால்......
ஒன்றுமே போராடாமல்
ஒதுக்கிவிடுகிறார்கள் எங்கள் மாமியார்கள்
எங்களையே.......
அவர்கள் இதயத்திலிருந்து!

- சி. கலைவாணி, வேலூர்
(தமிழ்நாடு)
================================================
அடிமை!
=========

யாருக்குக் கேட்கும்
எங்கள் இதயத்தின் நாதம்?
எப்போது உருகிப் பாடும்
எங்கள் சுதந்திர கீதம்?

எனக்குள் செய்கிறேன்
புதுமைப் பெண்ணென்ற விவாதம்.,
நாங்கள் அடிமை என்பதுதானா
எங்கள் வாழ்வின் வேதம்?

பெண்ணுரிமை என்பதெல்லாம் உங்கள்
பேச்சளவில்தானா?
மண்ணுக்குள் போகும்முன்பே அதை
மனமாரக் காண்போமா?

- தே. ரம்யா, திருவண்ணாமலை, (தமிழ்நாடு)
======================================

பெண்ணே நீ.........
-------------------------------------

பெண்ணே! உனக்கு எதிரி
மாமியாருமில்லை - போலி
சாமியாருமில்லை!
நீ, நீயேதான்!
உன்னைப் பிணைத்திருப்பது
இரும்பு விலங்கல்ல,
சின்ன நூல்தான்!
தொலைக்காட்சி ஊடகத்தின்
போலி சோகங்களில் உன்
நிஜமுகத்தைத் தொலைக்காதே!
உன் கழுத்து
தங்கநகைக்காக மட்டுமல்ல,
தங்க மெடல்களுக்காகவும் தான்!

- முத்து விஜயன், கல்பாக்கம், சென்னை
(தமிழ்நாடு)

---------------------------------------------------------------------

பாரதியின் வழியில்.......
--------------------------------------
தாய்க்குத் தலைமகளாய்
ஜென்மம் எடுத்த நாள்முதலாய்,
துணிந்தே நடக்கின்றேன்,
துன்பங்களையும் சகித்தபடி.
பதவியில் இருந்தபோது
பலர் போற்றும் உழைப்பாளியாய்,
கட்டிய கணவனின்
கருத்தறிந்த மனைவியாய்,
புரளி பேசுவோர்முன்
புலியாய், புரட்சிப் புயலாய்!
வீரம், விவேகம், தன்னம்பிக்கை
விதைகளை என்னுள்
விதைத்தது
‘பாரதி’யென்னும் உழவனின்
பார்போற்றும் கரங்கள்தான்!

- எஸ். சுமதி, சேலம்.
(தமிழ்நாடு)
-------------------------------------------------------------------

எழுச்சி கொள்வீர்!
--------------------------
பால்யத் திருமணமும்
பாலியல் குற்றங்களும் குறைந்தும்,
நீங்கிடவில்லை இன்னும்
பெண்ணடிமைக் கொடுமை!
நாகரிகப் போர்வையில்,
அங்கங்களைப் படமெடுத்து
ஆதாயச் சந்தையில் விற்கத்துணியும்
விஞ்ஞான விபரீத உலகமிதில்...
பெண்ணுரிமை பேசி
பொய்மையாய் வாழும் ஆண்களிடம்
அல்லல்பட்டு அடிபணியும்
அவலநிலையும் மாறவில்லை!
எழுச்சி கொண்டு சபதந்தன்னை,
எடுத்திடுவீர் இந்த மகளிர் நாளில்!

- ஹயத் பாஷா (JKK SMS Editor) சென்னை
(தமிழ்நாடு)
------------------------------------------------------------

புதுமைப்பெண்
===========
நிமிர்ந்த நடை
நேர்கொண்ட பார்வையோடு,
எத்தொழிலும் இன்று
முத்திரை பதித்து,
நித்தமும் புதுமலராய்.............
பாரதி கண்ட
புதுமைப் பெண்கள்!

- கொள்ளிடம் காமராஜ், (KKI SMS Editor) திருச்சி.
(தமிழ்நாடு)
====================================

எக்காலம்?
--------------
ஆண்டுதோறும் மகளிர்தினம்
கொண்டாடியும்
அகம் நிறையவில்லை எங்களுக்கு.
வேண்டுவன கேட்டும் கிடைக்கவில்லை,
எங்கள்
வேதனையை யாருமிங்கே
மதிப்பதில்லை!
யோசிக்கும் நிலையில் ஆள்வோர் இருக்க,
நாங்கள்
யாசிக்கும் நிலை மாறுவது
எக்காலம்?

- கிரிஜா நந்தகோபால், திருச்சி
(தமிழ்நாடு)