Thursday, July 7, 2016

கேள்விகள்!
=============

தோண்டாமல் வைரங்கள் கிடைப்ப தில்லை!
தூண்டாமல் தீபங்கள் எரிவ தில்லை!
தாண்டாமல் தூரங்கள் குறைவ தில்லை!
தானாக மாற்றங்கள் வருவ தில்லை!

ஆண்டாண்டு காலங்கள் மனித வாழ்வில்
அற்புதங்கள் நிகழ்த்தியது கேள்வி யாகும்!
பாண்டியனை வீழவைத்து மதுரையில் தீ
பரப்பியது கண்ணகியின் கேள்வி யாகும்!

ஆச்சரியக் குறிகளெல்லாம் அணி வகுக்க
அடிப்படையே வினாக்குறிதான்! முன்னேற்றத்தின்
மூச்சாக இருப்பதும் அடிமைகள் கூன்
முதுகுகளை நிமிர்த்துவதும் கேள்வி யால்தான்!

குருட்டுவிழி ஒலிபெறவே பாதை காட்டி
குழப்பங்கள் தெளிவாக்கும் கேள்விகள் தாம்
இருட்டுமென விடிவெள்ளி; ஞானத்தூண்டில்!
இவையின்றேல் அடைபடுவோம் மௌனக் கூண்டில்!


- கவிஞர் வல்லம் தாஜுபால் (தஞ்சை தாமு)










No comments: